காதல் பயணங்களில்..

19 10 2009

1. அன்புக்காதல் – இதுவும் காதல்!
கல்லில் வடிக்காத சிற்பக்காதல்
காகிதத்தில் வரையாத சித்திரக்காதல்
கல்கி எழுதாத சரித்திரக்காதல்
காவியங்கள் பாடாத உண்மைக்காதல்

அடிமுடி தெரியாத அழகியக்காதல்
ஹார்மோன்கள் வேலையற்ற அற்புதக்காதல்
பொறாமை இல்லாத புனிதக்காதல்
ஆண்பெண் தெரிவில்லாத அமுதக்காதல்.

“உனக்கும் பிடிக்குமே! கேட்போமா?
நம்மை திருமணம் செய்துகொள்ளச்சொல்லி!”

என்று சகதோழனையும் துணைக்கு
அழைக்கும் தூய்மையானக் காதல்!
பிரிவே இல்லாத பிரியமான காதல்!
என் வாழ்வில் இதுபோல் இல்லையென
மறுக்க இயலாத காதல்!

-அதுதான்
நம் சிறுவயதுக் காதல்!
நம் ஆசிரியை(யர்) மேல் நாம் கொண்ட
ஒருவித அன்புக்காதல்!
பெற்றோர்களே பெருமையுடன் பேசிச்சிரிக்கும்
பேரின்பக்காதல்!

இத்தனை
சொல்லும்போதும் ஒரு உறுத்தல்..
இந்த அழகான உணர்வை காதல் என்ற
வார்த்தைக்கொண்டா நிரப்ப வேண்டும்?

சரி, போகட்டும் வார்த்தை எதுவாக
இருந்தால் என்ன..!! நம் உள்ளம்
கொள்ளும் உணர்வுதானே முக்கியம்.
நம் தாய்(தந்தை)யிடம் நாம் கொண்ட
உணர்வுக்கு எள்ளளவும் வேறுபட்டதில்லையே..
இது..!

2. கவர்ச்சிக்காதல் – இதுவா காதல்?

சிக்கலில் சிக்க வைத்து சிரிக்கும் காதல்
சிந்தையையும் சேர்த்து சிதைக்கும் காதல்
கானல் நீரில் கால் நனைக்கும் காதல்
கடவுள் வந்தாலும் கண் மறைக்கும் காதல்

ஹார்மோன்களின் அடியாளாகும் காதல்
அரலிப்பூவிலும் தேன்தேடும் காதல்
விளையாட்டுபோல் இருக்கும் விபரீதக்கதல்
ஆசைமட்டுமே கொண்டிருக்கும் அலட்சியக்காதல்

நான் உன்ன விருப்பறேன். நீயும் என்னை
விருப்பித்தான் ஆகனும்”

என்ற கட்டாயத்தை உருவாக்கும் காதல்!
இது மட்டுமே வாழ்க்கை எனக்
கனவுப்பாடம் நடந்தும் காதல்!

- அதுதான்
நம் பதின்ம வயதுக்காதல்!
நம் சக எதிர்பாலினத்தினர் மீது நாம் கொள்ளூம்
ஒருவிதக் கவர்ச்சிக்காதல்.
பெற்றோர்களின் பெருமையை அழிக்கத்துடிக்கும்
சிற்றின்பக்காதல்!

அதனால்
இதை காதல் என்று எப்படிச் சொல்வது?
பதின்ம வயதின் ஈர்ப்பு!
காதல் செய்ய தெரிந்த அளவு காதல்
என்றால் எதுவென்று தெரியாத வயது!

அடிமனதில் ஆர்வங்கள் இருந்தபோதும்
ரகசியமாக ரசித்து, ரகசியமாக சிரித்து
ரகசியமாகவே அதை ஒதுக்கி வைத்து
சிக்கல் இல்லாமல் சிறைமீண்டவர்கள்
பலர் இருப்பினும் மீளத்தெரியாமல்
சிக்கித் தவிப்பவர்களும் சிலர் உண்டு.

கட்டுப்பாடு இல்லாமல் கட்டவிழ்ந்து
ஓடும் கன்றுகுட்டியைப் போல் எதுவும்
புரியாமலே பரபரக்கும் நம்வயது..

ஆபத்தான வாய்ப்பு கிடைத்தாலும் அதுஎன்ன?
என்று பார்த்துவிட துடிதுடிக்கும் நம்மனது..

பரபரக்கும் வயதையும், துடிதுடிக்கும் மனதையும்
கட்டிப்போட கையிறு எதுவும் தேவையில்லை.
கண்காணிப்பு மட்டுமே போதும்..
பெரும்படைகள் எதுவும் தேவையில்லை
நம்பெற்றோர்களே போதும்..

நம்மீது நம்வயது செய்யும் வன்முறைதான்
இந்த காதல்..!
அது தவிர வேரொன்றும் இல்லை
இது..!

-தொடரும்..





புதிய பார்வை..

1 10 2009

இன்று பார்த்த பார்வை
இதுவரை பார்க்கவில்லை!
இன்று தோண்றிய எண்ணம்
இதுவரை தோண்றவில்லை!
இன்று சொன்ன வார்த்தை
இதுவரை சொன்னதில்லை!
உன்னை பற்றி கவிஎழுத
இதுவரை நினைக்கவில்லை!
இன்று எழுத நினைத்தாலும்
வார்த்தைகள் சிக்கவில்லை!
உன்னை கவிதையாய் ரசிக்க
காரணம் தேவையில்லை!
ஆம்… எனக்கு
நீயும் ஒரு கவிதைதான்…
அன்புடன் நான் ரசிக்கும்
அழகான ” HI – KUU ” கவிதை…





எனக்கானது எதுவுமில்லை..

29 09 2009

சொல்ல ஒன்றும் இல்லை
சொல்லிக் கேட்க ஒன்றும் இல்லை
நினைக்க ஒன்றும் இல்லை
நினைத்துப் பார்க்க ஒன்றும் இல்லை
பிடித்தது ஒன்றும் இல்லை
பிடிக்கவும் ஒன்றும் இல்லை
மனமில்லை என்றாலும்
தேடி பார்த்துவிட்டேன்!
எனக்கானது எதுவும் இல்லை..
என் மீது கொண்டிருக்கும்
அந்த நூலிழை நட்பை தவிர…
எனக்கானது எதுவும் இல்லை உன்னிடம்..

————–***—————





மன்மத லீலை..

25 09 2009

மன்மத லீலை என்ற வார்த்தையை கேட்டால் அவரவர்களுக்கு ஆயிரம் கற்பனைகள் தோண்றும். அது ஒருவரின் அந்தரங்க மனது எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறது என்பதை பொறுத்து அதன் கற்பனை தரம் இருக்கும். அந்த லீலைகளை ரசனையுடன் கையாள்பவர்களும் உண்டு, கவர்ச்சியாக கையாள்பவர்களும் உண்டு, காமம் மட்டுமே பிரதாணமாக கொண்டவர்களும் உண்டு,அதைவிட ஒரு படி மேலே விலங்குகளைப் போல் நடந்துகொள்பவர்களும் உண்டு.

இக்காலத்தில் மிக தெளிவாக “எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம்தானப்பா” என்று சொல்லிக்கொள்ளும் இதே விசயத்தை மன்மதன் எனும் தேவனின் செயலாக உருவகப்படுத்தி நம் முன்னோர்கள் தனி இலக்கணங்களே வகுத்துவிட்டார்கள்.. அப்படி சொல்லபட்டதாக சமீபத்தில் படித்த சில..

காளிதாசன் – குமாரசம்பவம் – இந்திரன் சொல்வதாக..
“மன்மதா, என் வஜ்ராயுதத்தையும் உன்னையும் சமமாகவே கருதுகிறேன். இன்னும் பார்க்கப் போனால் வஜ்ராயுதத்தைவிட நீ உயர்ந்தவன். வஜ்ராயுதத்தை முனிவர்களிடம் உபயோகிக்க முடியாது. உன்னை மாமுனிவர்களிடமும் உபயோகிக்கலாம். நீ எங்கு சென்றாலும் வெற்றியுடன் திரும்புபவன்!”

“மன்மதா! நீ இல்லாதபோது மதுவில் மயங்கிய பெண்கள் செய்கிற செயல்கள் நகைப்பையே உண்டாக்கும். மது மயக்கத்தைவிடவும், நாணத்தில் சிவந்த கண்களுடன் முற்றுப் பெறாத வார்த்தைகளை, காதலுடன் ஒரு பெண் குழைந்து சொல்வதில் அதிக போதையுண்டு! ஆதலால் மன்மதா! நீயில்லாதபோது மது மயக்கம்கூட எந்த மனதையும் பரவசப்படுத்தாது.”

ஆண்டாள் – நாச்சியார் திருமொழி – ஆண்டாள் சொல்வதாக..
“மன்மதா, வானவர்க்காக முனிவர்கள் வகுத்த யாகத்தை காட்டிலுள்ள நரிகள் சூழ்ந்து தாண்டுவதும், முகர்ந்து பார்ப்பதும் எத்தனை கொடுஞ்செயலோ அத்தனைக் கொடியது – சங்கு சக்கரதாரியான மாதவனுக்காக சிருஷ்டிக்கப்பட்ட என் அங்கங்கள் – அற்பமான மானிடவர்க்கென்று பேசப்படுவது. இதை கேட்டதிலிருந்து வாழ விருப்பமில்லாது இருக்கிறேன் நான் என்று போய் சொல்!”

ஹர்ஷவர்த்தனர் – தன் கவிதையில்
“மன்மதா, உன்னை வாசலுக்கு வெளியே நிற்கச் சொல்பவர்கள் பொய்யர்கள். மோக தாகமெடுத்த உடலுக்கு உன் மொழி தவிர வேறு மொழி புரியாது.”

குற்றாலக் குறவஞ்சி -
” நேரிழையாரையும், ஊரையும் பாரடா மன்மதா! கண்ணில் நித்திரை தானொரு சத்துருவாச்சுதே மன்மதா! அட மன்மதா!”

நாராயண பட்டர்
“மன்மதா..
இந்தக் கண்ணன் சிறு பிள்ளை. என் காதலியை இவனது சந்நிதியில் வைத்து சல்லாபிக்கக் கூடாதாம்! நீயும் இவனும் இல்லாத இடம்தான் எது சொல்லேன்!”

கோபாலகிருஷ்ண நம்பூதிரி – ரதி புராணம்
“மன்மதா!
நீ மறைந்து நிற்கிறாய்.
அவள் மயங்கி நிற்கிறாள்.
போதை தலைக்கேற,
புதுக்கனிகள் சுவைக்க,
காதல் விளையாட்டுக்கென -
இலக்கணம் வகுத்தவனே!
எங்கு போனாய்!
வா!”

அஜாத சத்ருவில்
“மன்மதா,
உன்னிடம் ஒரு வேண்டுகோள்!
நான், என் மனைவியுடன்
இருக்கும்
நேரத்தில் மட்டும்
உன் பானத்தை வீசு!
மற்ற நேரங்களில்…
கண் மறவாய் இரு.
இல்லற தர்மத்திலிருந்து
என்னை நழுவச் செய்யாதே!
உனக்கு அனந்தகோடி
நமஸ்காரங்கள்!

———————————–***———————————–





இதுவரை சொன்னதில்லை..

21 09 2009

எனக்கு புத்தகங்களின் மேல் ஏன் இவ்வளவு ஆவல்? இதன் தொடக்கம் எப்போது ஆரம்பித்தது? யோசித்து பார்த்தேன்..

அய்யய்யோ.. நிறைய உண்மைங்க வெளிவரும்போல இருக்கே.. சரி ஆரம்பிச்சாச்சி.. முடிச்சிடறேன்..

என்னோட மணி அண்ணன், வேணு அண்ணன் இரண்டு பேருமே அப்ப காலேஜ் படிச்சிட்டு இருந்தாங்க.. நான் 6 – ஆவது படிச்சிட்டு இருந்தேன். என்னடா இது, இவ்வளவு வயசு வித்யாசமானுதானே யோசிக்கறீங்க.. அவங்க ரெண்டுபேருமே என் அப்பாவோட தம்பிகள்தாங்க. என்னோட அத்தை அவங்கள அண்ணா,அண்ணான்னு கூப்பிடறத பாத்து நானும் அப்படியே கூப்பிட ஆரம்பிச்சி விவரம் தெரிஞ்ச பின்னாலும் மாத்திக்க முடியாம அதுவே பழகிடுச்சிங்க..

6 – வது முழு ஆண்டு தேர்வு நடக்க ஆரம்பித்த நேரம் அது. அப்பதான் அண்ணன்களும் லீவ்ல ஊருக்கு வந்தாங்க. எனக்கு கணக்கு போட்டு பார்க்க ஒரு நோட் தேவைபட்டது. சரி அவங்க அலமாரில ஏதாவது இருக்குமான்னு தேடப் போனேன். அங்கதான் முதன்முதலா மினுமினுப்பான அட்டைகளோட குட்டி குட்டியா (துப்பறியும் நாவல்) நெறைய புத்தகங்கள பார்த்தேன்.மேலயே இருந்த ஒரு புக்கோட அட்டைபடம் வேற அழகான முயல் படம் போட்டிருந்ததா..! அந்த மாதிரி புத்தகங்களை அதுக்கு முன்னாடி நான் பார்த்ததில்லீங்க. ஆனா அது அண்ணனங்களோட காலேஜ் புத்தகம் இல்லேன்னு மட்டும் கண்டுபிடிச்சிட்டோமில்ல! :)

நான் அப்ப இருந்தது ஒரு கிராமத்துல தாத்தா பாட்டியோட, அதிலும் வசதிகள் இருந்தாலும் படிச்சவங்க யாரும் பக்கத்துல கிடையாதா.. படிக்கற புத்தகங்கள் தவிர வேற எதையும் பார்க்க படிக்க வாய்ப்பு ரொம்ப கம்மிங்க. தாத்தா கடைக்கு போய் எதாவது பொருள் வாங்கிட்டு வந்தா எனக்கு என்ன வாங்கி இருக்காங்கன்னு பார்க்கறேனோ இல்லையோ? அத கட்டி குடித்த பேப்பர்லதான் என் கண்ணு இருக்கும். அதுல என்னென்ன இருக்கோ அத்தனையையும் புரியலனாலும் படிச்சிடுவேன். அப்ப தான் எனக்கு தூக்கமே வரும்.

இத பார்த்ததும் ஒரே சந்தோசம். சரி எடுத்து பார்க்கலாம்னு கையை வச்ச நேரம் பார்த்தா மணீ அண்ணா வரனும். “என்ன வேணும்மா” ன்னு கேட்டாரு.. “நோட்டு ஒன்னு வேணும்ணா”ன்னு சொல்லிட்டு நாவல்களை காட்டி “இதெல்லாம் என்ன புக்ணா” ன்னு தெரியாத மாதிரி கேட்டேன். அதுக்கு “இதெல்லாம் பெரியவங்க படிக்கற புக்மா, உனக்கு புரியாது, நீ போய் படி” ன்னு சொன்னத கேட்டு புக்க பாத்துக்கிட்டே ” ஏன் நான் படிச்சா என்ன? நானும் பெரிய பொண்ணுதானே.. ஸ்கூல் – ல நாந்தான் கொடிப்பாட்டு பாடறேன், தெரியுமா? ன்னு கேக்கறேன். பின்னாடி சத்தமே இல்ல. அப்புறம்தான் தெரிஞ்சது அவரு அப்பவே போய்ட்டாருன்னு.

எனக்கு மூக்குமேல கோபம் வந்துருச்சி, அதெப்படி எனக்கு புரியாம போகும் ? நானுந்தான் கிளாஸ்ல பெஸ்டு ஸ்டூடண்ட், என்ன.. இங்லீஷ் தான் சரியா படிக்க தெரியாது, இது தமிழ்தானே ஏன் புரியாது? அப்படி என்ன இருக்கு அதுல? படிக்காம விடறதில்லைன்னு முடிவு செஞ்சி… முடிவு செஞ்சி.. ஒன்னே ஒன்ன மட்டும் சுட்டுகிட்டு வந்துட்டேன்.

நான் வழக்கமா படிக்கற வேப்பமரத்து நிழல்ல ஒக்காந்து அட்டைய சந்தோசமா பார்த்துட்டு படிக்கலாம்னு புக்க பிரிச்சி பார்த்தா எழுத்தெல்லாம் தலைகீழா இருக்கு.. அப்பதான் தெரிஞ்சது அதுவரைக்கும் நான் பின் அட்டையத்தான் பார்த்திருக்கேன்னு..அட சேன்னு தலைல அடிச்சிக்கிட்டு முன் அட்டைய திருப்பி பார்க்கறேன்.. இஈஈஈஈஈஈ… ன்னு ஒரு கொரங்கு இளிச்சிட்டு ஒக்காந்திருக்கு.ஒரு ஆளு வேற ரெத்தத்தோட பயந்துகிட்டு படிகட்டுமேல ஓடரமாதிரி படம் போட்டு இருக்கு. அப்படியே ஒரு நிமிசம் திக்குன்னுதான் இருந்தது. ஆனாலும் அதபடிக்காம விடமாட்டோமில்ல! :) அதுவும் கொரங்கு கதைவேற..!

அந்த நேரத்துலையும் ஏதோ ஒரு உறுத்தல் இருந்தது.

படிக்கும்போதே ஒரே யோசனைதான். ஒரு எடத்துலகூட குரங்கே வரமாட்டேங்குதேனு.. ஆனாலும் பிடிவாதமா ஒரு 20,25 பக்கம் படிச்சதுக்கப்புறம் தாங்க புரிஞ்சது, புக்கோட ஹீரோவே அந்த கொரங்குதான். பக்கத்துக்கு பக்கம் அது பேர்தாங்க. அது பேரு சிம்பன்சி. சிம்பன்சின்னு இருந்ததால அது யாரோ ஒரு ஆள் பேர்ன்னு..ஹி..ஹி.. :)

இதுல என்ன காமெடினா ஓ.. அந்த புக்ல வர கொரங்குக்கு சிம்பன்சின்னு பேர் வெச்சிருக்காங்க போல இருக்குன்னுதாங்க நினைச்சேன். கொஞ்ச நாள் போனதுக்கு அப்புறம்தாங்க சிம்பன்சின்னு ஒரு கொரங்கே இருக்குன்னு தெரிஞ்சது.

ஏதோ உறுத்தல்னு சொன்னேனில்லையா.. “அந்த அட்டைப்படத்துல இருக்கற கொரங்க ஏன் இவ்வளவு அசிங்கமா போட்டிருக்காங்க. கருப்பா இவ்வளவு முடியோட இருக்கே. கொரங்கு கொஞ்சம் அழகாத்தானே இருக்கும்”. ன்னு தோணிட்டே இருந்தது. அப்புறம் தானே தெரிஞ்சது.. கொரங்குக்கெல்லாம் கொள்ளுத்தாத்தா கொரங்கு இவருதான்னு. இந்த சார் பேர்தான் சிம்பன்சின்னு. ஆனாலும் சார் எப்பவுமே கொஞ்சம் அழகுதான் இல்லீங்க..! அதுவும் சிரிக்கும்போது அப்பப்பா….

அப்புறம் அந்த புக்க என் பைகுள்ளையே வெச்சிட்டு இருந்தேனா.. கணக்கு பரிட்சை அன்னிக்கு மணி அண்ணா சொல்லிகொடுக்க என்கிட்ட வந்து ஒக்காந்தாங்களா.. எப்பவும் போல நான் புக் எடுக்க பையை எடுத்தேனா.. அவரு பார்த்துட்டாரு.. பார்த்ததும் கொபம் வந்திருச்சிபோல இருக்கு.. சுத்திமுத்தி பார்த்துட்டு நங்’னு என் தலமேல ஒரு கொட்டு வெச்சிட்டாரு. நான் வழக்கம்போல சத்தமா அழுதேனா.. (அப்படி அழுதாத்தான் புயல்மாதிரி பாட்டி, தாத்தா யாராவது வருவாங்க, வந்து அண்ணன நல்லா திட்டிட்டு என்னைய எதாவது சாப்ட கூட்டிட்டுபோயிடுவாங்க.. அண்ணன் தலைல அடிச்சிக்கும். அவளை செல்லம் குடுத்து கெடுக்காதீங்கன்னு சொல்லிட்டே எழுந்து போயிடுவாரு. அப்பாடின்னு இருக்கும். பின்ன என்னங்க.. எது தெரியாத கணக்கோ அத தாங்க போடச்சொல்லி தெரியலன்னு திட்டுவாரு. தெரிஞ்சத போட சொல்லவே மாட்டாரு.. கோபம் வருமா வரதா.. நீங்களே சொல்லுங்க..) அட! யாருமே வரவே இல்லீங்க. பக்கத்துல யாருமே இல்லன்னு கன்பார்ம் பன்னிட்டுதான் அடிச்சே இருக்காருன்னு அப்புறமாதானே புரிஞ்சது.

அப்புறம் ரொம்ப நேரம் அழுதுட்டே இருந்ததும் சமாதானப்படுத்தர மாதிரி, “பரிட்சை எல்லாம் முடிஞ்சதும் நீ எடுத்து படிச்சா யாரு வேண்டாம்னு சொன்னது” னு சொல்லிட்டு கண்ண தொடச்சிவிடாரா.. ” நீங்கதான் அதுக்குள்ள எடுத்துட்டு போயிடுவீங்களே” னு அழுதுட்டே சொன்னதும் என்ன நெனச்சி சிரிச்சாருன்னு தெரியல.. சிரிச்சிட்டே “இல்ல, எல்லாத்தையும் இங்கயே வெச்சிட்டு போறேன்”னு சொல்லிட்டு எழுந்துபோய்ட்டாரு..

ஒருவாரம் எப்படா இந்த பரிட்சை எல்லாம் முடியும்னு அலுத்துக்கிட்டே எழுதி முடிச்சிட்டு மதியம் வந்ததும் வராததுமா எல்லாத்தையும் எடுத்து என் எடத்துல அடுக்கி வச்சிட்டுதான் சாப்பிடவே போனேன். அப்புறம் ஒவ்வொன்னா எடுத்து படிக்க ஆரம்பிச்சேன். அடித்த ஆறுமாசம் அண்ணா லீவ்ல வர வரைக்கும் அதையெல்லாம் திரும்ப திரும்ப எத்தனை முறை படிச்சிருப்பேன்னு எனக்கே தெரியாது. அதுதான் என்னோட ஆரம்பம்.. புத்தகம் படிக்க எனக்கு பிடிக்கும்னு எனக்கே தெரியவச்ச ஒரு சின்ன நிகழ்ச்சிதான் இது. நிகழ்ச்சி சின்னதா இருந்தாலும் என் வாழ்க்கைல இது ரொம்ப முக்கியமான நிகழ்ச்சி.

இதுக்கு முதல் காரணமான என் அண்ணாவுக்கு இதுவரைக்கும் நான் ஒரு நன்றி கூட சொன்னதில்லையேன்னு இப்ப தோணுது . இனிமேல் சொல்ல முடியுமான்னும் தெரியல.. ஏன்னா எனக்கு புத்தகங்கள் படிக்க பிடிக்கும்னோ, கொஞ்சம் எழுதவும் செய்வேன்னோ என் அண்ணாக்கு தெரிய வாய்ப்பில்லை. ஏதாவது சந்தர்பத்தில் இந்த பதிவை எப்பவாவது படிக்கற வாய்ப்பு இருந்து அவரும் இதை படிச்சார்ன்னா நிச்சயமா என்னோட உணர்வை புரிஞ்சிப்பாருன்னு நினைக்கிறேன்.

ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா!
எனக்கு புத்தகங்களை அறிமுகப்படுத்தினதுக்கு..





உன் வரவு.. நல்வரவு!

15 09 2009

மெத்தென்ற பட்டுஇழை முடிகள்..
சின்னப்பிறை நெற்றி.. சிறுவண்டுக் கண்கள்..
பூஞ்சிட்டு மூக்கு.. ரோஜாப்பூ கண்ணங்கள்..
சொப்புவாய் இதழ்கள்.. சிறுசங்கு கழுத்து..
கீரைத்தண்டு கைகள்.. அல்லிப்பூ விரல்கள்..
பிறைநிலா நகங்கள்.. இளந்தாமரை தண்டு உடல்..
இளங்குருத்து கால்கள்.. அந்திப்பூ விரல்கள்..
அவரைப்பூ நகங்கள்.. இலவம்பஞ்சு பாதங்கள்..
இத்தனையும் வைத்து கட்டி
சந்தனமும் பண்ணீரும், இளம்ரோஜா இதழ்களையும்
சேர்தரைத்த குழம்பெடுத்து மேலெங்கும் பூசிவைத்து
செய்தெடுத்த சிற்பமொன்று உயிர்கொண்டு
அன்னைமடி உறங்குதடி..
உறக்கம் கலைந்தாலும் அச்சுகமே பெறவேண்டி
உறங்குவதுபோல் நடிக்குதடி!

உறங்கியது போதும் கண்ணா!
உனக்கான உலகம் படைக்க வருவாய்..
அன்னையின் சிறுவயிற்றில் ஆடியது போதும் கண்ணா..
தந்தையின் தோல்களிலும் தொற்றிக்கொள்ள வருவாய்..
உன் முகம் காணவும் உன் குரல் கேட்கவும்
காத்திருக்கும் எங்களுக்கு தயைக்காட்டி வருவாய்..

ஆலிழைக் கண்ணனாக ஆயிரம் லீலைகள்புரிய
ஆலவட்டம் ஆடிக்கொண்டு அனைவரையும் ஈர்க்க
உன் சின்ன பாதம் கொண்டு இப்புவியையும் அளக்க
உன் அன்னைமேல் கருணை கொண்டு அப்பா நீ வருக!

புத்தம்புது பூஞ்சிறகே வருக..
பூத்துவிரியும் மலர்மொட்டே வருக..
வெட்டியெடுத்த கட்டிப்பொன்னே வருக..
கொட்டிஅளந்த கொற்க்கை முத்தே வருக..
மணி கர்ப்பத்தில் சுமந்த அன்னைமுகம் காண
மன கர்ப்பத்தில் சுமந்த தந்தைமுகம் காண
கண்ணே நீ வருக! கண்மணியே நீ வருக!





குறை ஒன்றும் இல்லை கண்ணா..

14 09 2009

பொதுவாக பாடல்களில் இசைதான் முதலிடம் வகிக்கும். பல பாடல்கள் இசையோடு பாடும்போது இருக்கும் சுவை அப்பாடல் வரிகளை படிக்கும்போது இருப்பதில்லை. ஆனாலும் காலத்தால் அழிக்க முடியாத ஒருசில பாடல்களின் வரிகள் நம் ஆழ்மனதை தொட்டுவிடுகிறது. அதற்கு இசை என்ற முகவரி தேவை இருப்பதில்லை. அப்படி பட்ட வரிசையில் இடம் பெற்றுள்ள பாடல்களில் இதுவும் ஒன்று.

எனக்கு சொல்ல முடியாத வேதனை ஏதாவது மனதை பிசையும்போது இந்த பாடல் வரிகள்தான் அந்த வேதனையை போக்கும் அரும்மருந்தாகும். குறைகளுடன் வேதனைப்படும் நமக்குள் ஒரு நேர்மறையான எண்ணத்தை தோற்றுவிக்கும் வரிகள். பாடும்போதே நம் மனதில் அமைதியையும், இதற்க்கா இந்த வேதனை என்ற தெளிவும் பிறப்பது உறுதி.

பாடல் : இராஜகோபாலாச்சாரியார்
பாடியவர் :எம்.எஸ்.சுப்புலஷ்மி

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா (2)

கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா..
கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

வேண்டியதை தந்திட வெங்கடேஸன் நின்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா – கண்ணா
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா

உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார் (2)
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா (2)
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா (2)
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா (2)
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

கல்லிலார்க்கிறங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா (2)
குறை ஒன்றும் இல்லை

யாதும் மறுக்காத மலையப்பா (2)- உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணை கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு (2)
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா (2)
மணிவண்ணா மலையப்பா
கோவிந்தா கோவிந்தா (3)





திருமண பந்தம்

7 09 2009

திருமணம் என்பது இருமனங்கள் இணைவது
உமையும் மணியும் போல!
இருமனம் மட்டுமல்ல இரு வெவ்வேறு
வேர்கள் இணைவது!
இதில் இன்பங்கள் மட்டுமே இழையலாம்
துன்பங்களுக்கு துளிகூட இடம் இல்லை.

ஊடலும் கூடலும் வாழ்க்கையின் நியதிகள்தான்
சில ஊடல்கள் விருப்பத்தில் முடியலாம்
சில ஊடல்கள் விட்டுக்கொடுத்து முடியலாம்
சில ஊடல்கள் சிரிப்பில் முடியலாம்
சில ஊடல்கள் சிந்தனையில் முடியலாம்
சில ஊடல்கள் சீண்டலிலும் முடியலாம் – ஆனால்
ஒன்றுகூட வெருப்பில் முடிய வேண்டாமே.

இங்கு
ஒரு வீட்டின் செல்ல மகள்
ஒரு வீட்டின் செல்ல மகன்
இந்த இருமனங்களுக்கும் திருமணம் முடிந்தால்
இருவரும் ஒரு வீட்டில் – அங்கு
செல்லங்கள் இருவருக்கும் பொதுவாகட்டும்
செய்கைகள் மற்றவரின் நலம் காக்கட்டும்
கோபங்கள் தன்னுள்ளே அடங்கிப் போகட்டும்
கவலைகள் மற்றவரால் கலைந்து போகட்டும்
இன்பங்களில் இருவருமே பங்கு கொள்ளட்டும்

நேற்றுவரை நாம் காக்கப்பட்டோம்..
இன்றுமுதல் நாம் காக்க வேண்டும் – நம் துணையை
அன்பாக.. ஆசையாக..
பாசமாக.. நேசமாக..
பரிவாக.. நட்பாக..
கனிவாக.. காதலாக..
இவை அனைத்துமாக!
இன்றுமுதல் நாம் காக்க வேண்டும்.
நம் துணையை..

(இது என்னுடன் பணிபுரியும் நண்பரின் சகோதரி திருமணத்திற்க்கு நான் எழுதிய வாழ்த்துமடல். உமா மகேஷ்வரி மற்றும் மணிகண்டன் அவர்களுக்கு என் திருமண நாள் வாழ்த்துக்கள்)





காதல் கவிதைகள் – 1

29 08 2009

என் விழியோரம் ஒரு நிழல்
என்கேயோ பார்த்த ஞாபகம்..
என் செவியோரம் ஒரு குரல்
எப்போதோ கேட்ட ஞாபகம்..
என் இதழோரம் ஒரு சுவை
எதையோ சுவைத்த ஞாபகம்..
என் மனதோரம் ஒரு சாரல்
எப்படியோ நனைந்த ஞாபகம்..
ஓ.! இப்போதுதான் புரிகின்றது!!
முற்பிறவியில்(லும்) நீதான் என்
வாழ்க்கைதுணை என்று…

—————-***—————-

அடடா !
உன்னிடம் கூடவா மறைத்துவிட்டேன்
என் வயதை..
நான் எப்படியடா சொல்வேன்…
உன்னைச் சந்தித்த நாளில்தான்
பிறந்தேன் என்று…
உன்னைக் கைப்பிடித்த நாளில்தான்
மலர்ந்தேன் என்று…

——————***—————–





இப்படியா பேசுவாய் ?

26 08 2009

சிரிக்கும்படி ஏதாவது சொல் என்றால்
” நான் உன்னை நேசிக்கிறேன்” என்கிறாய்
ரசிக்கும்படி ஏதாவது சொல் என்றால்
” நான் மிகவும் அழகானவன்” என்கிறாய்
கோபப்படும்படி ஏதாவது சொல் என்றால்
” நான் உன்னை பார்க்க வருகிறேன்” என்கிறாய்
பயப்படும்படி ஏதாவது சொல் என்றால்
” நான் அருகில்தான் இருக்கின்றேன் ” என்கிறாய்
ஆச்சர்யப்படும்படி ஏதாவது சொல் என்றால்
“நான் உன்னை வெறுக்கின்றேன்” என்கிறாய்
அதிர்ச்சி அடையும்படி ஏதாவது சொல் என்றால்
“நான் உன்னிடம் பேசமாட்டேன்” என்கிறாய்
சந்தோசப்படும்படி ஏதாவது பேசு என்றால்
“நான் அடுத்த ஜென்மத்தில் சொல்கிறேன்” என்கிறாய்

இப்படி பேசும் உன்னிடம் எப்படிதான் பேசுவது..
பேசாமல் இருந்தாலும் ஏதோ ஒன்று
குறைகின்றது.. ஏனெனில்
எனக்கு பிடித்தவர்கள் வரிசையில்
நீயும் இருந்து தொலைக்கின்றாயே..








Follow

Get every new post delivered to your Inbox.