குறை ஒன்றும் இல்லை கண்ணா..

14 09 2009

பொதுவாக பாடல்களில் இசைதான் முதலிடம் வகிக்கும். பல பாடல்கள் இசையோடு பாடும்போது இருக்கும் சுவை அப்பாடல் வரிகளை படிக்கும்போது இருப்பதில்லை. ஆனாலும் காலத்தால் அழிக்க முடியாத ஒருசில பாடல்களின் வரிகள் நம் ஆழ்மனதை தொட்டுவிடுகிறது. அதற்கு இசை என்ற முகவரி தேவை இருப்பதில்லை. அப்படி பட்ட வரிசையில் இடம் பெற்றுள்ள பாடல்களில் இதுவும் ஒன்று.

எனக்கு சொல்ல முடியாத வேதனை ஏதாவது மனதை பிசையும்போது இந்த பாடல் வரிகள்தான் அந்த வேதனையை போக்கும் அரும்மருந்தாகும். குறைகளுடன் வேதனைப்படும் நமக்குள் ஒரு நேர்மறையான எண்ணத்தை தோற்றுவிக்கும் வரிகள். பாடும்போதே நம் மனதில் அமைதியையும், இதற்க்கா இந்த வேதனை என்ற தெளிவும் பிறப்பது உறுதி.

பாடல் : இராஜகோபாலாச்சாரியார்
பாடியவர் :எம்.எஸ்.சுப்புலஷ்மி

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா (2)

கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா..
கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

வேண்டியதை தந்திட வெங்கடேஸன் நின்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா – கண்ணா
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா

உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார் (2)
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா (2)
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா (2)
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா (2)
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

கல்லிலார்க்கிறங்கி கல்லிலே இறங்கி
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா (2)
குறை ஒன்றும் இல்லை

யாதும் மறுக்காத மலையப்பா (2)- உன் மார்பில்
ஏதும் தர நிற்கும் கருணை கடல் அன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு (2)
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா (2)
மணிவண்ணா மலையப்பா
கோவிந்தா கோவிந்தா (3)





திருமண பந்தம்

7 09 2009

திருமணம் என்பது இருமனங்கள் இணைவது
உமையும் மணியும் போல!
இருமனம் மட்டுமல்ல இரு வெவ்வேறு
வேர்கள் இணைவது!
இதில் இன்பங்கள் மட்டுமே இழையலாம்
துன்பங்களுக்கு துளிகூட இடம் இல்லை.

ஊடலும் கூடலும் வாழ்க்கையின் நியதிகள்தான்
சில ஊடல்கள் விருப்பத்தில் முடியலாம்
சில ஊடல்கள் விட்டுக்கொடுத்து முடியலாம்
சில ஊடல்கள் சிரிப்பில் முடியலாம்
சில ஊடல்கள் சிந்தனையில் முடியலாம்
சில ஊடல்கள் சீண்டலிலும் முடியலாம் – ஆனால்
ஒன்றுகூட வெருப்பில் முடிய வேண்டாமே.

இங்கு
ஒரு வீட்டின் செல்ல மகள்
ஒரு வீட்டின் செல்ல மகன்
இந்த இருமனங்களுக்கும் திருமணம் முடிந்தால்
இருவரும் ஒரு வீட்டில் – அங்கு
செல்லங்கள் இருவருக்கும் பொதுவாகட்டும்
செய்கைகள் மற்றவரின் நலம் காக்கட்டும்
கோபங்கள் தன்னுள்ளே அடங்கிப் போகட்டும்
கவலைகள் மற்றவரால் கலைந்து போகட்டும்
இன்பங்களில் இருவருமே பங்கு கொள்ளட்டும்

நேற்றுவரை நாம் காக்கப்பட்டோம்..
இன்றுமுதல் நாம் காக்க வேண்டும் – நம் துணையை
அன்பாக.. ஆசையாக..
பாசமாக.. நேசமாக..
பரிவாக.. நட்பாக..
கனிவாக.. காதலாக..
இவை அனைத்துமாக!
இன்றுமுதல் நாம் காக்க வேண்டும்.
நம் துணையை..

(இது என்னுடன் பணிபுரியும் நண்பரின் சகோதரி திருமணத்திற்க்கு நான் எழுதிய வாழ்த்துமடல். உமா மகேஷ்வரி மற்றும் மணிகண்டன் அவர்களுக்கு என் திருமண நாள் வாழ்த்துக்கள்)





காதல் கவிதைகள் – 1

29 08 2009

என் விழியோரம் ஒரு நிழல்
என்கேயோ பார்த்த ஞாபகம்..
என் செவியோரம் ஒரு குரல்
எப்போதோ கேட்ட ஞாபகம்..
என் இதழோரம் ஒரு சுவை
எதையோ சுவைத்த ஞாபகம்..
என் மனதோரம் ஒரு சாரல்
எப்படியோ நனைந்த ஞாபகம்..
ஓ.! இப்போதுதான் புரிகின்றது!!
முற்பிறவியில்(லும்) நீதான் என்
வாழ்க்கைதுணை என்று…

—————-***—————-

அடடா !
உன்னிடம் கூடவா மறைத்துவிட்டேன்
என் வயதை..
நான் எப்படியடா சொல்வேன்…
உன்னைச் சந்தித்த நாளில்தான்
பிறந்தேன் என்று…
உன்னைக் கைப்பிடித்த நாளில்தான்
மலர்ந்தேன் என்று…

——————***—————–





இப்படியா பேசுவாய் ?

26 08 2009

சிரிக்கும்படி ஏதாவது சொல் என்றால்
” நான் உன்னை நேசிக்கிறேன்” என்கிறாய்
ரசிக்கும்படி ஏதாவது சொல் என்றால்
” நான் மிகவும் அழகானவன்” என்கிறாய்
கோபப்படும்படி ஏதாவது சொல் என்றால்
” நான் உன்னை பார்க்க வருகிறேன்” என்கிறாய்
பயப்படும்படி ஏதாவது சொல் என்றால்
” நான் அருகில்தான் இருக்கின்றேன் ” என்கிறாய்
ஆச்சர்யப்படும்படி ஏதாவது சொல் என்றால்
“நான் உன்னை வெறுக்கின்றேன்” என்கிறாய்
அதிர்ச்சி அடையும்படி ஏதாவது சொல் என்றால்
“நான் உன்னிடம் பேசமாட்டேன்” என்கிறாய்
சந்தோசப்படும்படி ஏதாவது பேசு என்றால்
“நான் அடுத்த ஜென்மத்தில் சொல்கிறேன்” என்கிறாய்

இப்படி பேசும் உன்னிடம் எப்படிதான் பேசுவது..
பேசாமல் இருந்தாலும் ஏதோ ஒன்று
குறைகின்றது.. ஏனெனில்
எனக்கு பிடித்தவர்கள் வரிசையில்
நீயும் இருந்து தொலைக்கின்றாயே..





ஞாபகம் வருதே..

24 08 2009

இந்த தலைப்பை படிச்சதுமே ஆட்டோகிராப் – சேரன் சாரோட படம் தான் ஞாபகம் வரும் – ஆழமான உணர்வுகளை அழகா எடுத்து காட்டிய படம். அப்படி பார்த்தா நம்ம ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையும் ஒரு ஆட்டோகிராப் தான் இல்லையா?.

நாம சின்ன வயசுல நடந்துகிட்ட சில விசயங்களுக்கும் (அட சில என்னங்க சில,பல விசயங்களுக்கும்) நம்ம பெத்தவங்களோ, சொந்தகாரங்களோ, வாத்தியாருங்களோ, அவங்க கோணத்துல இருந்து ஒரு காரணம் கண்டுப்பிடிச்சி சொல்லுவாங்க. இதனாலதான் இப்படி நடந்துகிட்டான், அதனாலதான் அப்படி நடந்துகிட்டாள்னு.. ஆனால் பெரும்பாலும் அது ஒரு யூகமாதாங்க இருக்கும்.

பெரும்பாலான பெரியவங்க எல்லாரும் “நீங்க சின்னவங்க, உங்களுக்கு என்ன தெரியும்” அப்படீன்னு சொல்லிக்கிட்டு “தப்பு பன்னா அடி விழும்” ன்ற பயத்த மட்டும் உண்டாக்கனும்னு நினைக்கறாங்க. அதனால ‘தொப்பு தொப்பு’ ன்னு ரெண்டு அடிய போட்டு அடக்கி ஒக்காரவெச்சிடுறாங்க.ஆனால் அந்த வயசுக்குரிய மனநிலையில யோசிக்கற நமக்கோ நாம செய்யறது தப்பாவே தெரியாது. ஏன்னா நம்மலோட கண்ணோட்டத்துல அதுக்கான காரணம் சரியாவே இருக்கும். அவங்க மேல கோபம்கோபமா வரும்.

அதே விசயத்தை நாம வளர்ந்ததுக்கு அப்புறம் யோசிச்சி பார்த்தா தலைல அடிச்சிக்கதாங்க தோணும். அப்ப சரின்னு பட்டது எல்லாம் இப்ப தப்புன்னு படும். அப்ப ஓன்னு அழுத விசயம் எல்லாம் இப்பா சிரிப்பா சிரிக்குமுங்க.

இந்த மாதிரி என்னோட சின்ன வயசுல நடந்த ஒரு சில விசயங்களை இந்த தொகுப்பு மூலமா உங்களோட பகிர்ந்துக்க ஆசைப்படுறேங்க..

உங்களுக்கும் இதுமாதிரி இருந்தா, இருந்தா என்னங்க இருந்தா கண்டிப்பா இருக்கும்ங்க.. நீங்க விரும்பின அதையும் எனக்கு சொல்லலாம்ங்க.

1) அப்ப 2 – வது படிச்சிட்டு இருந்தேன். தமிழ் வாத்தியார் பாடம் சொல்லி கொடுத்துட்டு “எல்லாரும் படிச்சிட்டு இருங்க நான் வந்து ஆளுக்கு ஒரு கேள்வி கேப்பேன், சரியா சொல்லல தோல உரிச்சி உப்புகண்டம் போட்ருவேன்” னு சொல்லிட்டு போய்ட்டார்.

அட என் பிரச்சனை அவருக்கு எங்க புரியுதுங்க. என்னோட தோழிய உயரமா இருக்கானு சொல்லி பின்னாடி லைன்ல ஒக்காரவெச்சிட்டாருங்க. எல்லாரும் கமுக்கமா பக்கத்துலையே படிக்கறமாதிரி புக்க வெச்சிகிட்டு குசுகுசுனு பேசிக்கறாங்க. நான் பேசனும்னா மட்டும் திரும்பி திரும்பி பேசனும்ங்க. அதுக்காக பேசாம இருக்க முடியுமா ? பாத்தேன்.. இது சரிபட்டு வராதுனு திரும்பி ஒக்காந்தே பேச ஆரப்பிச்சிட்டேன்.

போன வேலைய முடிச்சிகிட்டு திரும்பி வந்தவரு நேரா வரவேண்டியதுதானேங்க. சன்னல் வழியா நின்னுகிட்டு நோட்டம் விட்டிருக்காரு. அட அந்த பிசாசு புடிச்ச சன்னலு என் பக்கத்திலையா இருந்து தொலைக்கனும். வசமா மாட்டிக்கிட்டேங்க!

அதுல என்ன கொடுமைன்னா அவரு பாக்கறத பார்த்த மத்த பசங்க எல்லாம் அவரு பார்த்துட்டாருன்னு தெரிஞ்சும் படிக்கறமாதிரி தலைய குனுஞ்சி நடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.என்னால அத கூட பன்ன முடியலங்க. சர்வ லட்சணமா திரும்பி ஒக்காந்துட்டேனே. அதனால அவரு என்னைய பார்க்கறாருன்னு தெரிஞ்சும் திரும்பாம அவர நேருக்கு நேரா பாத்துகிட்டு அப்படியே ஒக்காங்திருந்தேன். இதுல ஒரு வசனம் வேற உள்ள ஓடுது “மத்தவங்க மாதிரி நா நடிக்கல சார்”.

கொஞ்சம்கூட அசையாம இருந்தத பார்த்ததும் பயங்கரமான கோபத்துல உள்ள வந்தவரு “எல்லாரும் படிக்கறாங்க, நீ என்ன செஞ்சிட்டு இருக்க” ன்னாரு

“நான் பேசிட்டு இருக்கேன் சார்” அப்டின்னேன். அவ்வளவு தான் அவரு முகத்துல எள்ளும் கொள்ளும் ஒரே படபட (இப்ப யோசிக்கும்போது தோணுது மனுசன் கடுப்பாயிருப்பாரு இல்ல)

“நான் படிக்க சொன்னா, படிக்காம பேசிட்டு இருந்துட்டு என்ன தைரியம் இருந்தா இப்படி பதில் சொல்லுவே கையை நீட்டு ” ன்னு குச்சில ஓங்கி அடிக்க வ்ந்தாரு. அதுக்குள்ள கையை பின்னாடி இழுத்துக்கிட்டு ” நான் படிச்சிட்டேன் சார்” னு சொன்னதும் அவரால தாங்க முடியல.. கையாவது காலாவது விலாசி தள்ளிட்டாரு போங்க..

கடைசி வரைக்கும் அவருக்கு அது தெரியாமலே போச்சிங்க. எதுன்னு கேட்கிறீங்களா? நான் நிஜமாலுமே படிச்சிட்டேன்ற விசயம்தாங்க!!





சொல்ல நினைத்தேன் சொல்லி முடித்தேன்..

21 08 2009

சந்தோசம், சோகம், பொறாமை, வெறுப்பு, கோபம், திமிர், அவமானம், நம்பிக்கை, துரோகம், பாராட்டு, பரிசு, அன்பு, அமைதி, பக்தி, பாசம், நேசம், நட்பு, காதல், காமம், பைத்தியகாரத்தனம், வெகுளித்தனம், முட்டாள்தனம், திருட்டுதனம், குழந்தைதனம், மனசாட்சி என்று இன்னும் என்னென்ன உண்டோ எல்லாவற்றையும் எங்கோ ஒரு இடத்தில் ஒருமுறையாவது நம் வாழ்க்கையில் சந்தித்திருப்போம். மற்றவர்களால் நாமும் நம்மால் மற்றவர்களும் இதுபோன்ற உணர்வுகளின் விளைவுகளை சந்தித்திருப்போம்.அதுவும் 25 (அ) 30 வயதுக்குள்ளாகவே இது அத்தனையும் நம் வாழ்வில் ஒருமுறையேனும் வந்துசென்றிருக்கும். நமக்கு தெரிந்து சில, இதுதான் என்று தெரியாமலே பல உணர்வுகளை நாம் வெளிப்படுத்தியிருப்போம் அல்லது அனுபவித்திருப்போம்.சின்ன சின்ன விசயங்களில் இருந்து பெரிய சம்பவங்கள் வரை இதுபோன்ற ஏதோ ஒன்று நம்மோடு தொடர்பு கொண்டிருக்கும்.

இந்த உணர்வுகளின் அடிப்படையில் மறைந்திருப்பது மனிதனின் குணங்களே.இதில் நல்ல குணங்களை விட தீய குணங்களின் எண்ணிக்கைதான் அதிகம். எண்ணிக்கை எப்படி இருப்பினும் அதை அனைத்தையும் வரிசைபடுத்தி முதல் 7 இடங்களில் எதை எதை மாற்றி எப்படி வைக்கின்றோமோ அவரவர்களின் வாழ்க்கையும் அப்படியே அமையும். ஏனெனில் முன் வரிசை மட்டுமே மற்ற பின் வரிசைகளின் செயல்பாட்டை அடக்கும் திறமை கொண்டவை. எனவே முன் வரிசைகளில் நல்லவற்றை இட்டு நிரப்புவது மட்டுமே நம் கடமை, தீயவைகளை அவைகளே பார்த்துக்கொள்ளும். சில தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தவிர்க்க வேண்டிய எண்ணங்கள் தலைதூக்கினாலும் அதை செயல்படுத்த விடாமல் தடுத்து நம்மை நல்வழிப்படுத்தும்.





சோளக்கொல்லைப் பொம்மை

8 08 2009

கிராமங்களில் உள்ள விவசாயிகள் தங்களது பயிர்களைக் காப்பதற்காக ஒரு பொம்மையை உருவாக்குவார்கள். இரண்டு குச்சிகளை ஒரு சிலுவைபோல அமைத்து அதன் மீது ஒரு சட்டையைப் போடுவார்கள். தலைக்கு ஒரு மண்பானையை வைப்பார்கள். விலங்குகளும் பறவைகளும் அதைப் பார்த்து ஒரு மனிதன் அங்கே நிற்பதாக எண்ணி பயந்து போகும். இரவில் அந்த வெள்ளை சட்டையும் இரண்டு கைகளுமாக யாரோ காவலிருப்பதைப் போலத் தோன்றும். விலங்குகளுக்கு அது போதுமானது. அவை பண்ணைக்கு அருகில் வராது.

இந்த போலி மனித பொம்மையைப் பற்றி கலீல் ஜிப்ரான் ஒரு அழகான கதை சொல்லுவார்.

கலீல் ஜிப்ரான் கூறுகிறார் ” ஒருநாள் நான் ஒரு சோளக் கொல்லைப் பொம்மையைப் பார்த்து, ‘உன்னைச் செய்த விவசாயிக்கு நீ தேவை. உன்னைக் கண்டு, அதிக அறிவில்லாத விலங்குகள் உண்மை என்று நம்பி விடுவதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.ஆனால் மழையிலும்,வெயிலிலும்,கொட்டும் பனியிலும்,நடுங்கும் குளிரிலும், நீ ஏன் இங்கே நின்று கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டேன்.

அதற்கு அந்த போலி மனித பொம்மை “உனக்கு என் மகிழ்ச்சி தெரியாது. மழை,வெயில்,பனி,குளிர் இவற்றில் துன்பப்பட்டாலும், அந்த விலங்குகளைப் பயமுறுத்துவதில் இன்பம் இருக்கிறது. எண்ணைக் கண்டு ஆயிரக்கணக்கான விலங்குகள் அஞ்சுகின்றன. நான் போலி என்றும் எனக்குள் ஒன்றும் இல்லை என்றும் எனக்குத் தெரியும். ஆனால் அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. எனது இன்பம் பிறரை பயமுறுத்துவதில் இருக்கிறது.” என்று கூறியது என்றார்.

இதே கதையை முன்வைத்து ஓஷோ தன் கருத்தை கூறுகிறார்..

கலீல் ஜிப்ரான் பொம்மையை கேட்டார். “நான் உங்களை கேட்க விரும்புகிறேன். நீங்கள் இந்தப் போலி மனிதனைப் போல இருக்க விரும்புகிறீர்களா? உள்ளே ஒன்றுமில்லாமல்,ஒருவரை பயமுறுத்திக் கொண்டு, மற்றொருவரை மகிழ்வித்துக் கொண்டு, மற்றும் ஒருவரை அவமதித்துக்கொண்டு, மற்றொருவருக்கு மரியாதை கொடுத்துக் கொண்டும் இருக்க விரும்புகிறீர்களா?

உங்கள் வாழ்க்கை பிறருக்காகத்தானா?

__________ /// ___________

ஞானிகள் கூறும் பல கருத்துக்கள் சராசரி மனிதனின் நடைமுறை சாத்தியத்தில் பலவீனமானதுதான். புரிந்து கொள்ளவும் கடினமானதுதான். ஆனாலும் இதுப்போன்ற எளிய சில கருத்துக்களையாவது புரிந்து கொள்ள நாமும் முயற்ச்சிக்கலாமே..








Follow

Get every new post delivered to your Inbox.